
அபிராமபுரத்தைச் சேர்ந்த தேவநாதனின் எட்டு மாத குழந்தைக்கு சளி ஏற்பட்ட நிலையில், கடந்த 13ஆம் தேதி பெற்றோர்கள் கை வைத்தியம் செய்து, விக்ஸ் தைலத்துடன் கற்பூரத்தை சேர்த்து குழந்தையின் மூக்கில் தேய்த்துள்ளனர். இதன் பிறகு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில், குழந்தைக்கு பிறந்தபோதே கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளதாகவும், அதுவே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்ஸ் தைலத்துடன் கற்பூரம் தேய்த்தது காரணம் அல்ல என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை, சம்பவத்தில் முந்தைய புகார் மற்றும் சந்தேகங்களுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.