
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் திடீரென சிறுமியை தூக்கிச் சென்று அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அங்கிருந்து தப்பிய சிறுமி, நடந்த கொடுமையை தனது பாட்டியிடம் தெரிவித்ததால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஐந்து நாட்களாக சிறுமி சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை பரிசோதித்தனர். அதில் குற்றவாளி சிறுமியை பின்தொடர்ந்து செல்வதும், யாரும் இல்லாத சமயம் தூக்கிச் செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த காட்சியை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர வலைவீசி வருகின்றனர். கொடூரமான இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.