
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்தில் காசி நூலக அலுவலராகவும் வெங்கடேசன் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசமங்கலம் கிராம கிளை நூலகர் சிவசங்கரி, கடந்த 26ஆம் தேதி சென்னாகுனம் நூலகம் வாடகைக் கட்டிடத்தில் செயல்படுவதால், அதன் வாடகை தொகையை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கேட்டுப் பெற சென்றுள்ளார்.
வாடகை பணத்தை விடுவிக்க மனுவாக எழுதி தரும்படி வெங்கடேசன் கூறியபோது, அலுவலகத்தில் இருக்கை இல்லையென கூறி சிவசங்கரி தரையில் அமர்ந்து மனுவை எழுதியதாக கூறப்படுகின்றது.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு இருக்கை அளிக்காமல் தரையில் அமரவைக்கப்பட்டதாக அவரது கணவர் விஸ்வநாதன் புகார் கூறி, சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.இந்த வீடியோவை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கண்காணிப்பாளர் வெங்கடேசன் விளக்கம் அளித்த போது, “சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் செய்யப்படவில்லை. நூலகத்தில் மேசை, இருக்கைகள் உள்ளது. அவர் விருப்பப்படி தரையில் அமர்ந்து மனு எழுதினார்,” என கூறினார்.
இது அரசுப் பணியிடங்களில் சாதி பாகுபாடு இன்னும் நீடிப்பதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி, இனப்பாகுபாடு தடுக்கும் கடும் நடவடிக்கைகள் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.