
நெல்லையிலிருந்து சென்னை நோக்கி நேற்று வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. வேல்வார்கோட்டை அருகே சென்ற போது, ரயிலில் இருந்த ஏர் கண்டிஷனரில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு பெட்டியில் புகை மூட்டம் உருவாகி வெளியேறத் தொடங்கியது.
இதைக் கண்ட பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அதையடுத்து ரயில் வேல்வார்கோட்டை அருகே நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பப் பணியாளர்கள் விரைந்து வந்து கோளாறு சரி செய்து சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.
இந்த இடைஞ்சலால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். சமீபத்தில் கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் ரயிலுடன் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் ரயில்வே பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.