
திருப்புவனம் அருகே நகைத் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான போலீசாரின் குடும்ப பெண்கள் மற்றும் குழந்தைகள் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். “உயரதிகாரிகள் உத்தரவின்பேரிலேயே தாக்குதல் நடந்தது. கணவர்களை மட்டும் குற்றவாளியாக்கி விடக் கூடாது. சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளும் கண்காணிக்கப்பட வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தர்ணா இடத்தில் போலீசார் பாதுகாப்பு கட்டுப்பாட்டை பலப்படுத்தினர். போராட்டத்தால் காவல் நிலையம் அருகே பரபரப்பு நிலவியது.