
ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் பலரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர், சமூக வலைத்தளங்களில் புகழ் பெற்றவர். Forex ஆன்லைன் டிரேடிங் மூலம் முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் லாபம் ஈட்ட முடியும் என பலரை நம்ப வைத்தார்.
அதன் மூலம் பலரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் வரை பெற்றுக்கொண்டார் என்று புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஷ்ணு மற்றும் அவரது மனைவி அஸ்மிதா உள்ளிட்டோருக்கு எதிராக மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷ்ணுவுக்கு எதிராக மனைவி அஸ்மிதா தனியாக அளித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், ஆன்லைன் டிரேடிங் மோசடி தொடர்பாக மனைவி அஸ்மிதா மீதும் தற்போது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.