
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்த இந்திய விமானப்படை கேப்டன் சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பிரதமர் மோடியுடன் உரையாடியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று நீங்கள் தாய் மண்ணில் இருந்து வெகுதூரத்தில் உள்ளீர்கள். ஆனால், இந்தியர்களின் மனதுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டீர்கள். உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கமாகும். விண்வெளியில் நமது தேசியக்கொடியை ஏந்தியதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பயணம், விண்வெளி தேடலுக்கான நமது மாணவர்களின் உறுதியை வலுப்படுத்தும். மேலும் கேரட் அல்வாவை எடுத்துச் சென்றீர்களே. அதனை சக விண்வெளி வீரர்களுடன் பகிர்ந்து கொண்டீர்களா? என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து சுபான்ஷூ சுக்லா உங்களின் வாழ்த்துக்காகவும், 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது வரைபடத்தை விட இந்தியா பெரியதாக தெரிகிறது. இந்தியர்களை பிரதிநிதித்துவம் படுத்துவதில் பெருமை அடைகிறேன். இந்த பயணம் எனக்கானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கானது. உங்கள் தலைமையின் கீழ், இன்றைய இந்தியா, தனது கனவை நிறைவேற்ற பெரிய வாய்ப்புகளை பெற்றுள்ளது.
நான் என்னுடன் கொண்டு வந்த கேரட் அல்வா, பாசிபருப்பு அல்வா ஆகியவற்றை என்னுடன் வந்திருக்கும் அனைவருக்கும் கொடுத்து ஒன்றாக சாப்பிட்டோம். அனைவருக்கும் பிடித்தும் இருந்தது.
சற்று நேரத்திற்கு முன்பு, விண்வெளி மையத்தில் இருந்து பூமியை பார்த்த போது, ஹவாய் தீவு மேலே பறந்து கொண்டு இருந்தது தெரியவந்தது. சுற்றுப்பாதையில் இருந்து தினமும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை 16 முறை பார்க்கிறோம். நமது தேசம், மிக வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த திட்டமானது நமது நாட்டிற்கு ஒரு துவக்கம் தான். விரைவில் நமக்கு என்று தனியாக விண்வெளி நிலையம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.