
தென்கொரியாவில் பரவிய காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது
தென் கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சான்சியாங்க் பிராந்தியத்தின் காடுகளில் கடந்த வாரம் தீ பற்றியது.
அங்கு நிலவும் வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று காரணமாக, தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து சிரமத்துக்குள்ளாகி வருகின்றன.
இந்த காட்டுத்தீயால் சுமார் 43,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் எரிந்து சேதமடைந்துள்ளதுடன் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவில் உட்பட முக்கியமான வரலாற்றுச் சின்னங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
முதலில் இந்த தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவலின்படி, பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் 130 ஹெலிகாப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஏற்பட்ட தீவிர பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவரமாக நடைபெற்றுவரும் நிலையில் , பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.