
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், தனது கையில் பட்டா கத்தியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.
அவரின் இந்த செயல், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், சட்டவிரோதமான ஆயுதங்களை சமூக ஊடகத்தில் விளம்பரப்படுத்தும் முயற்சி எனவும் போலீசார் கண்டித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தாக்குதல் அல்லது துன்புறுத்தல் போன்ற பதிவுகள் குறித்து கண்காணிப்பு நடத்தி வரும் போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுத்து கார்த்தியை கைது செய்தனர்.
அதன்பின், தனது செயல் தவறானது என்பதை உணர்ந்த கார்த்தி, மன்னிப்பு கோரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதில், “புகைப்படங்களை வேடிக்கைக்காக வெளியிட்டேன்; எதிர்மறையாக பார்க்கப்படும் என எனக்குத் தெரியவில்லை” என கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் கூறியதாவது: “சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் அல்லது சட்டவிரோதமான விதத்தில் ஆயுதங்களை காண்பிக்கும் வகையில் பதிவுகள் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.