
சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் பெயராக உருவெடுத்துள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு, தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டதோடு, அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விஷ்ணு, தமிழக வெற்றிக கழகத்திற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பங்களித்து வந்தவர். சமீபத்தில் ஒரு பெண்ணை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிமுகமாகி, நேரில் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகளும், அதற்கான தாக்குதல் வீடியோவும் தான் அவரது பெயரை அனைவருக்கும் தெரியபடுத்தியது
இந்த சம்பவத்துக்குப் பிறகு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் மேலும் அவரின் மீது கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளன.
ஒப்பனை கலைஞராக உள்ள விஷ்ணுவின் மனைவி அஸ்மிதா, விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார்.
விஷ்ணு மற்றும் அஸ்மிதா இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப மோதல் இப்போது காவல் துறைக்கு வந்து வழக்காக வளர்ந்துள்ளது.
விஷ்ணுவால் தாக்குதலுக்குள்ளானதாகவும், துன்புறுத்தல் செய்யப்பட்டதாகவும் கூறிய அஸ்மிதா, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, நம்பிக்கை மோசடி, மானபங்கம், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முன்னதாக ஒரு யூடியூப் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில், தனது மனைவிக்கும் ஒரு உயர் பதவியில் உள்ள ஏடிஜிபி அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாக விஷ்ணு தெரிவித்திருந்தது பெரிய சர்ச்சையாகயிருந்தது.
தற்போது அந்தப் பேட்டியையும் மனைவி அளித்த புகாரையும் தொடர்ந்து விசாரித்து, விஷ்ணுவை கைது செய்துள்ள போலீசார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.