
பம்மல் அருகே நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “முந்தைய தேர்தலில் திமுகவின் தோல்விக்கான ஒரு முக்கிய காரணம், டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்ற வாக்குறுதியே. எங்கள் தலைவர் ஸ்டாலின் டாஸ்மாக் மூடுவோம் என்றதும், மக்கள் அதற்கு ஆதரவு கொடுப்பார்கள் என நாங்கள் நம்பினோம். ஆனால், உண்மையில் குடிக்கிறவர்கள் தான் கூட்டமாக திரண்டு, டாஸ்மாக் மூடப்படக்கூடாது என்று எதிர்வழியில் பிரசாரம் செய்தார்கள்” என்றார்.
ஆனா, குடிக்கிறவங்கள் எல்லாம் சேர்ந்து பிரசாரத்தை தொடங்கினதே டாஸ்மாக்கில் தான். சேல்ஸ் மேனும், சூப்பர்வைசரும் தான் தேர்தல் பிரசாரக் கருவி. அங்கு 5, 10 ரூபாய் குறைவா கொடுத்தாலும் பரவாயில்லைன்னு வாங்கி கல்லாவில் போடும் போது சொன்னான், இன்னிக்குதான் கடைசி, இனிமேல் கிடையாது என்றார்.
சாப்பாடுக்கூட இல்லாமல் இருப்போம் சரக்கு இல்லன்னா எப்படின்னு யோசனை பண்ணி இவங்க ஆட்சிக்கு வந்து கடையெல்லாம் மூடிட்டா என்ன பண்றதுன்னு சொல்லி குடிக்கிறவங்களா சேர்ந்து ஓட்டு மாற்றிபோட்டதால் தான் நாங்க ஆட்சியை விட்டுப்போனோம்.
இந்த தேர்தலில் நிறைய பேர் கேட்டாங்க, மூடுவிங்களா?ன்னு நாங்க வாயே மூடிட்டோம். ஏதாவது அபிப்ராயம் உண்டா என்றான். வாயைத்திறக்கவில்லை.
இப்போ சொல்றேன். இது திராவிட முன்னேற்றக்கழகத்தின் கருத்து இல்லை. முதலமைச்சரின் கருத்து இல்லை. இது நெல்லிக்குப்பம் புகழேந்தியின் தனிப்பட்ட கருத்து. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் டாஸ்மாக் கடையை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு எல்லாம் மூட சொல்ல மாட்டேன். 24 மணி நேரமும் இயங்கட்டும். யாருக்கும் வஞ்சனை இல்ல. குடிக்கிறவன் தான் குடிக்கப்போவான்.
குடிக்கிறது யாராக இருந்தாலும் சரி, அவர் சொல்லி திருந்துவான், இவரு சொல்லி திருந்துவான் இல்லை. அவனா திருந்தின்னாதான் உண்டே தவிர வேற யாராலயும் அவனை திருத்த முடியாது. இது என்னுடைய கருத்து. எதுக்கு டாஸ்மாக் கடை 24 மணிநேரமும் திறக்கணும் சொல்கிறேன் என்றால்… குடிக்கிறவன் நாட்டுக்கு தேவையில்லை என்று பேசினார்.