திமுக கூட்டணியில் விரிசல்? – திருமாவளவனை சந்தித்த அதிமுக வைகைச் செல்வன் விளக்கம்!

"AIADMK’s Vaigai Selvan meets Thirumavalavan amid speculation of a rift in the DMK alliance."

காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக, இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில்  மதச்சார்பின்மை பாதுகாப்பதற்கான பேரணி சமீபத்தில் திருச்சியில் நடைபெற்றது. அங்கு வைகைச் செல்வனும் பங்கேற்று திருமாவளவனை நேரில் சந்தித்த சம்பவம் ஊடகங்களில் விவாதமாகியிருந்தது

இதுபற்றி ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் கேட்ட போது அதற்கு பதிலலித்து பேசிய வைகைச் செல்வன்,

“திமுக கூட்டணியில் தற்போது ஓட்டை விழுந்திருக்கிறது. இதற்கான , பதில் விரைவில் வெளிவரும்”
என்று சுட்டிக்காட்டினார். “அந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை முழுமையாக இப்போது பகிர முடியாது. ஆனால், நான் உங்களுக்கு அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறேன்” என சிக்னல் கொடுக்கும் வகையில் பதிலளித்தார்.

இந்தக் கருத்துகள், எதிர்வரும் நாட்களில் தமிழக அரசியலில் அதிமுக-திமுக கூட்டணிகளுக்கிடையே புதிய பரிணாமங்களை ஏற்படுத்தும் எனும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது