
கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ச்சியான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குனியமுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்றிருந்த ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த சோதனையில் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் இருந்ததும், பின்னர் விசாரணையில் அவர் திண்டுக்கல் துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (37) எனவும் அடையாளம் காணப்பட்டார்.
நிதி நிறுவனம் ஒன்றை நடத்த்தி வந்த சதீஷ்குமார் , கோவைப்புதூரில் வாடகை அறை ஒன்றில் தங்கி இருந்து கஞ்சா மற்றும் உயர் ரக மெத்தா பெட்டமைன் போதைப்பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
ஒரு கிராம் மெத்தபெட்டமைனை ரூ.2000 முதல் 3000 வரை விற்று, அதிலிருந்து கிடைத்த லாபத்தில் தங்க நகைகள், கார் போன்ற சொகுசுப் பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.
போலீசார் அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோாடு சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.