“நான் போலி விவசாயி அல்ல” – ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் பதிலடி!

Edappadi Palaniswami strongly responds to Stalin, says "I am not a fake farmer"

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். தன்னை போலி விவசாயி என குற்றம் சாட்டியதற்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “நான் உண்மையான விவசாயி; நீங்கள் தான் போலி விவசாயி” என தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், “2018 முதல் 2021 வரை, அ.தி.மு.க ஆட்சியில் பயிர் காப்பீடாக ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு, இந்திய அளவில் முதன்மை மாநிலமாக உருமாறியது,” என பழனிசாமி குறிப்பிட்டார்.

மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஆனால் இன்று ஹெக்டேருக்கு ரூ.13,500 மட்டுமே வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

“2021-ல் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் — கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்குவது, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக நீட்டிப்பது — அனைத்தும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறை இல்லை,” என்றார்.

தலைவாசலில் கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் சூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி என்பதை பெருமையாகக் கூறுவேன். இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன்.

விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?’ நீங்கள்தான் போலி விவசாயி.

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும் தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும்போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.