
சென்னை தாம்பரம் அருகே கௌரிவாக்கத்தில் உள்ள கட்டிட பணித்தளத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்ரோஷ் சேக் என்பவரின் இரண்டு வயது மகன் பிலால் ஷேக் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அக்ரோஷ் சேக் மற்றும் அவரது மனைவி அமல்லா இருவரும் வேலைக்காக தங்கள் மூன்று ஆண் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கௌரிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டட பணியில் அக்ரோஷ் சேக் ஈடுபட்டுள்ளார். நேற்று வழக்கம்போல, கட்டிடத்தின் கீழ்தளத்தில் தனது குழந்தையை விளையாட விட்டுவிட்டு, மேல் தளத்தில் வேலை செய்து வந்தார்.
பின்னர் மதிய உணவுக்காக குழந்தையை தேடியபோது, அருகில் லிப்ட் அமைக்க தோண்டிய பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் பிள்ளை மூழ்கி கிடப்பதை கண்டதும், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்
தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதி தொழிலாளர்களிடையே துயரத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.