
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் பதவி வகித்த காலத்தில், கல்லூரிக்கு தேவையான உபகரணங்கள், ஆய்வகப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை வாங்கும் பணிகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாக குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உண்மை நிலையை ஆராய 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ரூ.5 கோடிக்கும் அதிகமாக அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சதீஷ் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், முறைகேடு தொடர்பான முழுமையான விவரங்களை 15 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க 3 பேர் கொண்ட குழுவுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.