
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் கட்டப்பனை பகுதியில், வீட்டில் வளர்க்க தடை செய்யப்பட்ட பச்சை கிளிகளை கூண்டுகளில் அடைத்து வளர்த்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பெண்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட வகை கிளிகளை ஜோடியாக 100 ரூபாய்க்கு வாங்கி, பின்னர் ஒன்றுக்கு 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 139 பச்சை கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத வன உயிரின வணிகத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், பகுதி முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
கிளிகளை விற்பனை செய்வது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி குற்றம் என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.