
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுபிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் நடந்த நகை மற்றும் பண கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதியை சேர்ந்த காசிலிங்கம் (75) நிலக்கடலை வியாபாரியாக செயல்பட்டு வருகிறார். அவரது மகன் ராஜா (45), விழுப்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் அவர் பூர்வீகமான புது பிள்ளையார்குப்பம் வீட்டிற்கு வந்து சென்றிருந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல வீட்டின் மேல் தளத்தில் உள்ள மகனின் அறைக்குள் காசிலிங்கம் சென்று விளக்கை ஏற்றி விட்டு, கீழே வந்து தூங்கியுள்ளார். இன்று காலை மீண்டும் செல்லும்போது, கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்வையிட்டபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 152 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 லட்சம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் காடாம்புலியூர் போலீசாருக்கு புகார் அளித்தார். டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வழி காட்டியதன் அடிப்படையில் வீடுமுழுவதும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மர்மநபர்களை பிடிக்க சிறப்பு போலீசார் வலைவீசி தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.