
150 அடி உயரமுள்ள தேர் சரிந்ததில் இருவர் உயிரிழந்ததையடுத்து கோலகலமாக ஆரம்பிக்கப்பட்ட திருவிழா சோகமயமாக மாறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது
கர்நாடகாவின் பெங்களூரு அருகே ராயசந்திரா பகுதியில் அமைந்துள்ள மதுரம்மா கோவிலின் வருடாந்திர திருவிழா வெகு விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வந்தது
இந்த கோவில் திருவிழா, பாரம்பரியமாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் முக்கிய நிகழ்வு என்பதால் இந்த முறையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவில் 150 அடி உயரமுள்ள தேர், திடீரென ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக பக்தர்களின் மேல் சரிந்து விழுந்துள்ளது
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த லோகித் என்ற 24 வயதுடைய ஆட்டோ ஓட்டுநரும், பெங்களூரைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது
மேலும் இந்த விபத்தில் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்ததுடன் , தேரின் அடியில் சிக்கி 10 க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர் .
படுகாயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரம்மா கோவில் திருவிழாவில் நடந்த இந்த துயர நிகழ்வு பாரம்பரிய நிகழ்வுகளில், பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டியுள்ளது மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் அரசும் ஏற்பாட்டாளர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்