
விழுப்புரம் மாவட்டம் கோனேரி குப்பம் பகுதியிலுள்ள சரஸ்வதி கல்லூரி வளாகத்தில் கட்டியிருந்த தேன் கூட்டை நேற்று மாலை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர். இந்த செயலுக்கு லாண்டர்ஸ் என்ற ரசாயன ஸ்பிரே பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தேன்கூடு கீழே விழுந்தபோது அகற்றப்படாமல் அங்கேயே இருந்ததாக தெரிகிறது. இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கீழே கிடந்த தேனடையை எடுத்து சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு அவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு தவித்து வருகின்றனர்.
இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் உடனடியாக அந்த மாணவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கோனேரி குப்பம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரசாயன ஸ்பிரே மூலம் அழிக்கப்பட்ட தேனடையை அகற்றாமல் வைத்திருப்பது தொடர்பாக அலட்சியத்துக்கு யார் காரணம் என விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் கல்லூரி வளாகத்திலும், மாணவர் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.